சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் மேலெழுந்துள்ள சிக்கலை பிரதானமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
அசோக ரன்வலவுக்கு கலாநிதி கல்வித்தகைமை உள்ளதா என்பது தொடர்பில் பதிலளிக்க தாமதப்படுத்துவதும் உண்மையிலேயே அவருக்கு குறித்த கல்வித்தகைமை இல்லயெனின் பொதுமக்களை தவறாக வழி நடத்தியமை மக்கள் ஆணையை புறக்கணிக்கும் விடயம் என்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தமது கட்சியின் உறுப்பினர்கள் கூடிய போது இவ்விடயம் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அதன் பின்னர் ஏனைய கட்சிகளுடன் இணைந்து உத்தியோகபூர்வமாக தீர்மானமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 22ஆவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இவ்விடயம் சமூக ஊடகங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.