
இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மறுசீரமைப்புக் குழுவின் முதல் இலக்கு, ‘இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, அதனுடன் புதிதாக முன்மொழியப்பட்ட யாப்பை செயல்படுத்துவதாகும்’ என அதன் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்றக் குழு பதவி விலகியதை அடுத்து விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இந்த மறுசீரமைப்புக் குழுவை நியமித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் அடங்கிய ஒன்பது பேர் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹானாம, குமார் சங்கக்கார, சிதத் வெத்தமுனி ஆகியோருடன் துஷிர ரதல்ல, அவன்தி கலம்பனே, பிரகாஷ் ஷாப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் டினால் பிலிப் ஆகியோரும் அடங்குகின்றனர்.
இந்தக் குழுவில் பிரதான இரு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்தும் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறந்த நிர்வாகத்தை அமைத்தல் மற்றும் களத்தில் சிறந்த செயல்திறன் என்ற அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு பணிகள் விரைவாக இடம்பெறும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மறுசீரமைப்புகளின் பின்னர் விரைவாக இலங்கை கிரிக்கெட் அணி கடந்த காலத்தை போன்று சிறப்பான வெற்றிகளை பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
