ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் இந்த குழு செயற்படுவதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள உறுப்பினர்களில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு துறையின் பணிப்பாளர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்திருப்பதாவது,
“பிரதான குழுவின் கீழ் மேலும் பல துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன, அவை ஏற்கனவே அறிக்கையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.
66,000 பக்கங்களுக்கு மேல் கொண்ட அறிக்கையின் தற்போதைய பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்”
என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க அறிக்கையை ஒப்படைத்தார்.
அறிக்கை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜேபால உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.