
கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் – போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது
தெஹிவளையில் முதியவர் ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சந்தேக நபர் “ஐஸ்” போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி தெஹிவளை வைத்தியசாலை வீதியில் நடந்து சென்ற 74 வயதுடைய ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி, அவரது சட்டைப் பையில் இருந்த ரூபாய் 2100 பணத்தை பறித்து சந்தேக நபர் தப்பிச் சென்றிருந்தார்.
மனிதாபிமானமற்ற செயல் இடம்பெற்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்தனர்.
தெஹிவளை பொலிஸ் குற்றப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் வைத்திருந்த ஐஸ் போதைப்பொருள் 5200 மில்லிகிராம் அளவும் பொலிசார் கைபஓபற்றியுள்ளனர்.
சந்தேக நபர் 23 வயதுடையவர், தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கல்கிசை கௌரவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
