
ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம்
ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திங்கள்கிழமை மாலை அந்த குழு இஸ்லாமாபாத்தை சென்றடையும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முந்தைய பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்ட ட்ரம்பின் ஆலோசகர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெறுவார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் தெஹ்ரான் தனது பங்கேற்பை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்கத் தடை அமுலில் இருக்கும் வரை அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதிப் பேச்சுவார்த்தைகள் சுமார் 21 மணித்தியாலங்கள் நீடித்தன. ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் வொஷிங்டனும் தெஹ்ரானும் பெரும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்ததால், அமைதி ஒப்பந்தம் தோல்வியுற்றது.
