
தமிழக தேர்தல் களம் அமைதியுற்றது – அதிகாரத்தை கைப்பற்றப் போவது யார்?
தமிழகத்தில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரலாற்று பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.
மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியும், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக கூட்டணியும் நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தல், வெறும் ஆட்சிப் போட்டி மட்டுமல்ல தலைமுறைகள் மாறிய அரசியலின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் முக்கியமான சோதனையாக பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் தனித்துப் போட்டியிடுவது, இந்தத் தேர்தலை நான்கு முனைப் போட்டியாக மாற்றியுள்ளது . இதனால், பாரம்பரிய வாக்கு வங்கிகள் சிதையுமா? புதிய அரசியல் சக்திகள் எழுச்சி காணுமா என்ற கேள்விகள் வாக்காளர்கள் மனதில் எழுந்துள்ளன.
கருணாநிதி–ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு உருவான அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலாக இது அமைந்துள்ள நிலையில், இந்த முறை மக்களின் தீர்ப்பு எந்த திசையில் செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசியலில் முக்கியமான நாட்களாக 2026 ஏப்ரல் 23 மற்றும் மே 04 ஆகிய திகதிகள் கருதப்படுகின்றன.ஏனெனில் ஆட்சியை தக்க வைக்க முயலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, இழந்த ஆட்சியை கைப்பற்ற விரும்பும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி என இரு பழம்பெரும் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலில் மோதுகின்றன.
இந்த சூழலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அதேபோன்று விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.
நான்கு முனை போட்டி இந்த தேர்தலை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றி இருக்கிறது. இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை உண்டாக்குமா என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைவர் கருணாநிதியும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இரு பெரும் அரசியல் ஆளுமைகளாக திகழ்ந்தனர். அவர்களின் மறைவை அடுத்து தமிழ்நாடு சந்திக்கக்கூடிய இரண்டாவது சட்டப்பேரவை தேர்தல் இது.
2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடத்தப்பட்ட நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 234 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்றது.
அந்த வகையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது. 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு கட்சி ஆட்சி அமைப்பது அதுவே முதன்முறை. 2016 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா அதே ஆண்டில் டிசம்பர் 5 ஆம் திகதி மரணமடைந்தார். அதன் பிறகு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என அடுத்தடுத்து முதல்வர் பதவி மாறியது. அதன் பின்னர் அதிமுக கட்சிக்குள்ளேயும் பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்டன.
இந்த சூழலில் ஜெயலலிதாவும் , கருணாநிதியும் மறைந்த பின்னர் முதன் முறையாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுகவின் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. அதுவும் அதிமுகவுக்கு வெறும் 66 இடங்கள்தான் கிடைத்தன. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை திமுகவுக்கு வட மாவட்டங்களும் காவிரி டெல்டா மாவட்டங்களும் பெருமளவில் வெற்றியை பெற்றுக் கொடுத்தன.
குறிப்பாக சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் 64 தொகுதி திமுகவுக்கு கிடைத்தது. திமுக அருதி பெரும்பான்மை பெறுவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது.
அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது.
இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய். அவரது தமிழக வெற்றி கழகம் இந்த முறை 233 தொகுதிகளிலும் களம் காண்கிறது. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
எதிர்வரும் வியாழக்கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன், மே மாதம் நான்காம் திகதி முடிவுகள் வெளியாகும். இந்த தேர்தலில் மொத்தம் 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இன்று மாலை 06 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் களம் அமைதியுற்றுள்ளது.
ஆகவே பழைய ஆதிக்க அரசியலும், புதிய மாற்றத்திற்கான குரலும் நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தல், தமிழ்நாட்டின் அரசியல் பாதையை மறுபரிசீலனை செய்யக்கூடிய தருணமாக பார்க்கப்படுகிறது.
கூட்டணிகளின் கணக்குப் போர்கள், தனித்து நிற்கும் கட்சிகளின் சவால்கள், புதிய தலைமுறையின் அரசியல் ஆசைகள் இவை அனைத்தும் சேர்ந்து இந்தத் தேர்தலை சாதாரணமாக அல்ல, தீர்மானம் மிக்க தேர்தலாக மாற்றியுள்ளன.
மே 4 ஆம் திகதி வெளியாகும் முடிவுகள், வெறும் வெற்றியாளரை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலப் பாதையையும் தீர்மானிக்கப்போகின்றன. மாற்றமா ஏற்படுமா அல்லது தற்போதைய ஆட்சி தொடருமா என்ற இறுதி கேள்விக்கான பதில் மக்கள் கையில்.
பாலகணேஷ் டிலுக்ஷா
