ஈஸ்டர் தாக்குதல் – நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து

ஈஸ்டர் தாக்குதல் – நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில்
முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் இடம்பெற்று ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற விசேட திருப்பலியில் உரையாற்றிய போதே அவர்
இதனைக் கூறியுள்ளார்.

சில தரப்பினர் விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

தாக்குதல்கள் தொடர்பாகத் தங்கள் கடமைகளை ஆற்றத் தவறிய ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும்
பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தபோதிலும்,
சட்டமா அதிபரும் அவரது திணைக்களமும் நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்துவதாக அவர் கவலை வெளியிட்டார்.

தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய நபர்களை, அவர்களின் தகுதியைப் பொருட்படுத்தாமல்,
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரிப்பது அவசியம் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் கூறினார்.

“ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியைக் கண்டுபிடிப்பது, நீதியை உறுதி செய்வதும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்
அவர்களது குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதும் ஆகும்,” என்று அவர் கூறினார்.

2024 ஆம் ஆண்டு ஒக்டோபரில் கட்டுவபிட்டிய தேவாலயத்தில், காலப்போக்கில் உண்மை மங்கிவிட அரசாங்கம் அனுமதிக்காது
என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு பேராயர் கேட்டுக்கொண்டார்.

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர, ஒரு விரிவான, உண்மை அடிப்படையிலான
விசாரணையை நடத்துமாறு அவர் ஜனாதிபதியை வலியுறுத்தினார்.

மேலும், தற்போதைய முயற்சிகள் தொடரும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான தங்களின் போராட்டம் ஓயாது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )