
ஜப்பானில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும்
ஜப்பானில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு நிலநடுக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக ஜப்பானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட வலுவான தீவிரத்தன்மையுடன் பதிவாகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நேற்று ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கம் காரணமாக, கிழக்குக் கடற்கரைப் பகுதியை சுனாமி அலைகள் தாக்கியிருந்தன.
ஜப்பான் புவியியல் ரீதியாக “நெருப்பு வளையம்” பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு ஆண்டுக்கு சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
மேலும், உலகம் முழுவதும் பதிவாகும் ரிக்டர் அளவுகோலில் 6.0 க்கும் அதிகமான நிலநடுக்கங்களில் 10 சதவீதம் ஜப்பானிலேயே பதிவாகின்றன.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவாதே மாகாணத்தின் தெற்கே ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 9.0 ஆகப் பதிவான பாரிய நிலநடுக்கமே ஜப்பானில் இதுவரை பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும். அதன் விளைவாக ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்து, வரலாற்றின் மிக மோசமான அணுசக்தி பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
