அரசாங்கத்திற்கு நான் மட்டுமே மாதமொன்றிற்கு 05 மில்லியன் ரூபாயை சேமிக்கிறேன் – ஹர்ஷன

அரசாங்கத்திற்கு நான் மட்டுமே மாதமொன்றிற்கு 05 மில்லியன் ரூபாயை சேமிக்கிறேன் –  ஹர்ஷன

ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்து தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தான் மட்டும் மாதமொன்றிற்கு சுமார் 05 மில்லியன் ரூபாயை சேமிப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் பேரணியொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நான் இதைப் பற்றி பெருமை பேசவில்லை, ஏனெனில் அனைத்து அமைச்சர்களும் இதனையே செய்கிறார்கள்.

மூன்று வாகனங்கள், பாதுகாப்பிற்காக சுமார் 15 பணியாளர்கள் மற்றும் ஒரு வாகன அணிவகுப்புக்கு மூன்று பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள்
என்பவற்றைப் பெறமுடியும்.

எங்கள் தொகுதிகளைப் பார்வையிட நாங்கள் பயப்படாததால் எங்களுக்கு இந்தப் பாதுகாப்பு தேவையில்லை, ஆனால் எதிர்க்கட்சிகள் பயப்படுவதால் அவர்களுக்கு அது தேவை.

அமைச்சர் ஒருவருக்கு தனிப்பட்ட 20 பணியாளர்களை உரிமை கோர முடியும். ஆனால் எனக்கு ஒன்பது பேர் மாத்திரமே உள்ளனர்.

இந்த தேவையற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலம் நான் மட்டும் அரசாங்கத்திற்கு மாதத்திற்குசுமார் 05 மில்லியன் ரூபாயைச் சேமிக்கிறேன்

இது ஒரு நபர் மட்டுமே – எங்கள் குழு இந்த வழியிலேயே செயற்படுகிறது.

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான வாகன அனுமதிகளை எடுக்கவில்லை , உத்தியோகப்பூர்வ இல்லங்களில் தங்கவில்லை, வரி செலுத்துவோர் மீது சுமையை ஏற்படுத்தவில்லை” என அமைச்சர் மேலும் கூறினார்.

Share This