இராமர் பாலத்தை பார்வையிடுவதற்கான படகு சேவைகள் ஆரம்பம்

இராமர் பாலத்தை பார்வையிடுவதற்கான படகு சேவைகள் ஆரம்பம்

தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற இராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மே மாதம் 15 ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும்,பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டு நீண்ட காலமாகத் தாமதமாகியிருந்த இந்த திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும்  கனகேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகள் தொடர்பில் கடற்படையினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும் பின்னர் சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காகக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்திநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம். கீர்த்தி ஸ்ரீ சந்திரரத்ன, மற்றும் பிரதேச செயலாளர்,முப்படையினர், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Share This