
கைவிலங்குடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சுனா எம்.பி
கைத்துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்படி, கையில் விலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார்.
கடந்த 25ம் திகதி காணி பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண் ஒருவரை கைத்துப்பாக்கியை காட்டி அர்ச்சுனா எம்.பி அச்சுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து கடந்த 27ம் திகதி காலையில் இலவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குறித்த காணி உரிமை தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிவரும் நிலையில், ஒரு பெண்ணும் அந்த நிலத்திற்கு உரிமை கோரியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு பெண்கள், அந்த நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுானா கைத்துப்பாக்கியை காட்டி இந்த மிரட்டலை விடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
