மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (ஏப்ரல் 21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டமானது, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் 430.7 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் மனித கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 10 நவீன குளிரூட்டப்பட்ட தாழ்தளப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இப்பேருந்துகள் குறிப்பாக சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி இலகுவாக ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

33 இருக்கை வசதிகளைக் கொண்ட இப்பேருந்துகளில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்பதுடன், பயணிகளின் பாதுகாப்பிற்கான விசேட அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தச் சேவையானது மாகும்புரவிலிருந்து கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், இந்த போக்குவரத்து வலையமைப்பானது மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளதால், சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இது பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )