நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்

நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்

யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால், குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார்.

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும், வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆகிய இரு படகுகளின் சேவை நேரம் நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

தற்போது நிலவும் கால நிலையில் விரைவாக இருட்டுவதனால், படகு சேவைகளை 30 நிமிடங்கள் முன்னதாக மாற்றியுள்ளோம்.

அதன் அடிப்படையில் நெடுந்தீவில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் படகு, வியாழக்கிழமை முதல் 30 நிமிடங்கள் முன்னதாக 3 மணிக்கு புறப்படும்.

அதேபோன்று குறிகாட்டுவானில் இருந்து, மாலை 5 மணிக்கு புறப்பட்ட படகு இனி மாலை 4.30 மணிக்கு புறப்படும்.

அதேவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்து, காலையில் நீண்ட நேரம் குறிகாட்டுவானில் படகுக்கு காத்திருப்பதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.45 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் படகு , குறிகாட்டுவான் சென்று மீண்டும் காலை 08 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து தனது சேவையை ஆரம்பிக்கும் என தெரிவித்தார்.

அதேவேளை குமுதினி படகின் நேர ஒழுங்கில் மாற்றம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This