எலான் மஸ்க்கிற்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் – டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி

எலான் மஸ்க்குக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், அது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
டெஸ்லா தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிற்கு, பல பில்லியன் அமெரிக்க டொலர்களை ஊதியமாக அள்ளி வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, நிறுவன பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர்.
இதன் மூலம் எலான் மஸ்க் தலைமையில் நிறுவனம் நீண்ட கால இலக்குகளை எட்டினால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதிக்க முடியும். இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில், 75 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்குதாரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உலகில் இதுவரை எந்தவொரு நபரும், இந்த அளவிலான மிகப்பெரிய ஊதிய தொகுப்பை பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனத்திற்காக எலான் மஸ்கால் நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்ப இலக்குகளை தொடர, நீண்ட காலத்திற்கு அவரை நிறுவனத்தில் தக்கவைக்கவே இந்த பிரமாண்ட ஊதிய தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் 7.5 ஆண்டுகள் தக்கவைக்கப்பட உள்ளார். பங்குதாரர்கள் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் மஸ்க் அடைந்தால், அவர் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுக்க முடியும்.
