சங்குப்பிட்டி பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்

சங்குப்பிட்டி பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்

பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளிவந்துள்ளது.

யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று முன்தினம் (12) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, அந்த பெண் படுகொலை செய்யப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது.

அந்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.

அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த பெண் வீட்டை விட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்துள்ளார். அவரது சடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை.

அவர் வீட்டை விட்டு புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதுவரையான விசாரணையில் வெளியான தகவலின்படி, அந்த பெண் தனது கணவரிடம் குறிப்பிட்டவர்களுடன் சென்றிருக்கவில்லையென்பது தெரிய வந்துள்ளது.

அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்த போதும், உடற்கூராய்வில் அது உறுதிப்படுத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வெகுவிரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள் என பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share This