விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வி

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுத் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது. நேற்று மாலை வரை எவ்வித பொருட்களும் கண்டுப்பிடிக்கப்படாமையால், குறித்த பதுங்கு குழி மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

அந்த பகுதியில் நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (10.07.2025) காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போரின் முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி அமைக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர், குறித்த காணியில், கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். போரின் போது குண்டுத் தாக்குதல்களால், பதுங்குகுழியின் வாயில்கள் மூடப்பட்ட நிலையில், அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை. இந்த நிலக்கீழ் பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பதுங்குகுழியில், விடுதலைப்புலிகளின் தங்கமோ அல்லது ஆயுதங்ளோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சிலர் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் புதுக்குடியிருப்புப் பொலிஸார் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் (09.07.2025) குறித்த நிலக்கீழ் பதுங்குகுழியைத் கிராம சேவையாளர், விசேட அதிரடி படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார், உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் நிலக்கீழ் பதுங்குகுழியில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நேற்றுமுன்தினம் (09) சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த பகுதிகளை பார்வையிட்டதுடன், தொடர்ந்தும் நேற்று (10.07.2025) காலை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு பணித்திருந்தார்.

 

Share This