குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம் – 09 பேர் பலி

இந்தியாவில் குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து வீழ்ந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 09 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பாலத்தில் எப்போதும் காலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்கள் ஆற்றில் வீழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய விரிசல் சத்தம் கேட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து தீயணைப்பு பிரிவு, பொலிஸார் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.
மத்திய குஜராத்தை சவுராஷ்டிராவுடன் இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்தப் பாலம், அரசால் முறையாக பராமரிக்கப்படாததால் இந்த விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
காம்பிரா பாலம் கடந்த ஆண்டுதான் பழுதுபார்க்கப்பட்டதாகவும், பாலத்தின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு 212 கோடி ரூபா மதிப்புள்ள புதிய பாலத்திற்கு குஜராத் முதல்வர் அனுமதி அளித்ததாகவும் அரசு அதிகாரிகள் கூறினர்.
புதிய பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் மற்றும் டெண்டர் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.