
மாண்டல்சன் தகுதி சரிபார்ப்பு முடிவை அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்தனர் – பிரதமர் ஸ்டார்மர் குற்றச்சாட்டு
அமெரிக்கத் தூதர் பதவிக்கான பாதுகாப்புச் சோதனையில் லார்ட் மாண்டல்சன் ஆரம்பத்தில் தோல்வியடைந்தார் என்ற உண்மையை, வெளியுறவு அலுவலக அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறிக்கை அளித்த பிரதமர், தனக்கு இது தெரிந்திருந்தால் குறித்த நியமனத்தை மேற்கொண்டிருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் தகுதி சரிபார்ப்பு முகமையின் பரிந்துரைக்கு எதிராகச் செயல்பட்டு, லார்ட் மாண்டல்சனை அப்பதவிக்குத் தகுதிப்படுத்தியதை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயத்தில் பிரதமர் பொறுப்பேற்பதற்குப் பதிலாக தனது ஊழியர்களையும் அதிகாரிகளையும் கைவிட்டுவிட்டுள்ளதாக கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே, இந்த விடயத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோச் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நியமனத்தின் போது முழுமையான உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியதன் மூலம், பிரதமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திவிட்டதாகவும் கெமி பேடனோச் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், தான் நாடாளுமனற சபையை தவறாக வழிநடத்தவில்லை என்று பிரதமர் வலியுறுத்தினார்.
லார்ட் மாண்டல்சனின் தேர்வு செயல்முறை குறித்த மறுஆய்வைத் தொடங்கியபோதுகூட தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
