
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – உண்மையான குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், பாரபட்சமான நடவடிக்கை மற்றும் தவறான பழி சுமத்தல் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்களுக்கு நிதியளித்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் பாதுகாக்கப்படுவதாகவும், இச் சந்தர்ப்பத்தில் ஏனையவர்கள் இலக்கு வைக்கப்படுவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்ட போதும், ஒரு தனிப்பட்ட கொலை வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், விசாரணைகளை நடத்துபவர்களின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாக்குதல்களுடன் ராஜபக்ஷ குடும்பத்தைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை நாமல் ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
இந்த நிலையில், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு அதிகாரிகளிடம், நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
