ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்?

ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்?

அரசற்ற இனம் ஒன்று தமது ”அரசியல் விடுதலை” நோக்கிச் செல்வதை – பேசுவதை, இனவாதம் என்று ”அரசு” என்ற கட்டமைப்பு உள்ள இனம் ஒன்றின் தலைவர் கூற முடியாது.

குறிப்பாக அந்த அரசின் ஜனாதிபதி, தேர்தல் மேடைகளில் அவ்வாறு கூற முடியாது. இனிமேல் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்கிறார் அநுர.

ஆனால் ஒரு அரசுக்குரிய நிதி – நீதி- நிர்வாகம் மற்றும் முப்படைகள் அனைத்தையும் பயன்படுத்தி 2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைகள் எத்தனை?

2015 இல் மைத்திரி – ரணில் நல்லாட்சி என்று வர்ணிக்கப்பட்ட அரசாங்கம், தமிழ் வரலாற்று பாட நூல்களில் பௌத்த சமய வரலாறுகளை புகுத்தியது. பாட நூல்களில் சிங்கள சொற்கள் புகுத்தப்பட்டுள்ளன. அதாவது பாட நூல்களில் சிங்கள இனவாதம் புகுத்தப்பட்டுள்ளது.

ஐ.நாவின் யுனெஸ்கோ கல்வி முறையின் பிரகாரம் பாட நூல்கள் அந்தந்த தேசிய மொழிகளிலேயே எழுதப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் சிங்கள மொழியில் இருந்து தான் தமிழ் பாட நூல்கள் மொழி பெயர்க்கப்படுகிறது.

அதுவும் வரலாற்று பாட நூல்கள் மொழி பெயர்க்கப்படுவது மிகத் தவறு ”தமிழ்மொழி” ”சைவ சமயம்” ”இஸ்லாமிய சமயம்” ஆகிய பாட நூல்களை தவிர ஏனைய அனைத்து தமிழ் பாட நூல்களிலும் சிங்களம் தான் பாட நூலின் ”மூலம்” ஆக உள்ளது.

பிரதானமாக வரலாறு 2015 இல் நல்லாடசி என்று அழைக்கப்பட்ட அரசாங்கம் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை, கொழும்பை மையமாகக் கொண்ட தொல்பொருள் திணைக்களம், வன இலாகா திணைக்களம், காணி பதிவு திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைகள் மூலம் சட்டரீதியாக கைப்பற்றும் அணுகு முறைகளை அறிமுகப்படுத்தி இருந்தது.

காணிகளை அபகரிக்க முப்படைகள் மற்றும் பொலிஸாரை அரசாங்கம் அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வருகிறது. இந்த அணுகுமுறை 2020 இல் கோட்டாபய ஜனாதிபதியாக வந்ததும் தொடர்ந்தது.

இது அநுர ஆட்சியிலும் தொடர்கிறதே? சட்டவிரோத விகாரைகளை அகற்ற உத்திரவிட முடியுமா?

இப்போது கேள்வி என்னவென்றால் அநுர கூறிய ”மாற்றம்” ”சோசலிம்” என்றால் என்ன?

அத்துடன், பாட நூல் விவகாரம் உள்ளிட்ட அத்தனை அநீதிகளையும் ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் இருந்து செய்து கொண்டு, இனவாத அரசியலுக்கு இடமில்லை என்று எந்த முகத்தோடு கூறுகிறார் அநுர?

இனவாத அரசியலை 1920 ஆம் ஆண்டில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வெவ்வேறு வடிவங்களில் இன்று வரை தொடர்வது யார்?
2009 மே மாதம் போரை வெற்றி கொண்டு விட்டதாக பெருமைப்பட்டு கொழும்பில் வெற்றி விழா கொண்டாடினார்கள் சரி.

இனிமேலாவது குறைந்த பட்சம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏதேனும் குறைந்தபட்ச தீர்வையாவது முன்வைக்க வேண்டும் என்று எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவராவது கடந்த 15 வருடங்களில் சிந்தித்தாரா?

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஐந்தில் ஆறு பெரும்பான்மை வாக்குகளினால் 1988 இல் 13 நிறைவேற்றப்பட்டுள்ளது!

மேலும் சில கேள்விகள்—-புரிதல்கள்—

2009 இற்குப் பின்னர் கடந்த 15 வருடங்களில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனையை இளைஞர்களிடம் ஊக்குவிப்பது யார்?

தமிழர் பிரதேசங்களில் ”மண் அகழ்வு” – ”காடுகளை அழித்து மரங்களை வெட்டுல்” போன்ற சட்ட விரோத செயலுக்கு ஒத்துழைப்பது யார?
தமிழக மீனவர் பிரச்சனை தூண்டப்படுவது யாரால்?

2009 இற்கு முன்னரும் – பின்னரும் வடக்குக் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கு தீனி போட்டு வளர்ப்பது யார்? பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவது ஏன்?

ஊழலை ஒழிப்போம் அதிகார துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் என்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் சத்தியம் செய்து விட்டு, தற்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார மேடைகளில், சலுகைகள் – நிவாரணங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவது சரியா?

அது அதிகாரத் துஷ்பிரயோகம் என்று அநுரவுக்குத் தெரியாதா? அது மாபெரும் ஊழல் மோசடி என்று அநுரவுக்கு புரியாதா?

அது தவறு என்று சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு கூட அநுராவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதே! ஆகவே தமிழ்த் தேசிய கட்சிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்ற இனவாதம் எங்கிருந்து வருகிறது?

இக் கேள்விகளுடன் ஒப்பிடுகையில், ஜேஆர் – சந்திரிகா – மகிந்த – கோட்டா – ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடவில்லை. ஆக இலங்கை என்பது ”ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பு” எவர் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் தமிழர்களின் நிலை.

அ.நிக்ஸன்

Share This