
119 தொலைபேசி சேவையில் தாமதம் – சுவ செரிய சேவையுடன் ஒப்பிட்டு ஹர்ஷ விசனம்
இலங்கை பொலிஸாரின் அவசரகால தொலைபேசி சேவை முறையை, சுவ செரிய இலவச ஆம்புலன்ஸ் சேவையுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.
அவர் தனது ‘X’ தளத்திலேயே இவ்வாறு விமர்சித்துள்ளார்.
பொலிஸார் கையாள்வதாகக் கூறும் 4,500 அழைப்புகளை விட அதிகமாக, சுவ செரி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாளைக்கு சுமார் 5,000 அழைப்புகளைக் கையாண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் 98.9% வீதமான அழைப்புகளுக்கு, முதல் அழைப்பிலேயே பதிலளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொலிஸாரின் 180 நிமிட தாமதத்துடன் ஒப்பிடுகையில், நாடளாவிய ரீதியில் சுவ செரியவின் சராசரி பதிலளிக்கும் நேரம் 13 நிமிடங்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுவ செரியவின் செயல்திறனுக்கு டிஜிட்டல் அமைப்புகள், கடுமையான நெறிமுறைகள் மற்றும் அதன் ஊழியர்களின் அணுகுமுறையே காரணம் என ஹர்ஷா டி சில்வா பாராட்டினார்.
119 அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்துத் தனக்குத் தினமும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் ஒப்புக்கொண்டதற்குப் பதிலளிக்கும் வகையில் அவரது கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
