நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்

நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்

தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது.

புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை அமைப்பு (WMO – World Meteorological Organization) வெளியிட்டுள்ள புதிய பருவகால அறிக்கை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கியுள்ளது.

இந்த ஆண்டின் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கத்தில் தற்காலிக அமைதி காப்பது போல் தெரிந்த பசிபிக் பெருங்கடல், தற்போது அசுர வேகத்தில் வெப்பமடைந்து வருவதாக செயற்கைக்கோள் தரவுகள் எச்சரிக்கின்றன.

இதன் விளைவாக, உலகமே அஞ்சிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலை அதிகாரப்பூர்வமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. இது ஒரு தற்காலிக வானிலை மாற்றம் அல்ல – மாறாக உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கு விடுக்கப்பட்டுள்ள ‘போர்ப் பிரகடனம்’ என்றே காலநிலை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆய்வாளர்களின் புதிய தரவுகளின்படி, மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள புவி வெப்பமயமாதல், பசிபிக் பெருங்கடலின் இந்த அசாதாரண வெப்ப அலையை மேலும் உந்தித்தள்ளி, வரலாற்றிலேயே மிகக் கொடூரமானதொரு ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) பேராபத்தாக உருவெடுக்கும் என்ற அச்சத்தை உலகளாவிய காலநிலை விஞ்ஞானிகள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.

அறிவியலின் இறுதி எச்சரிக்கை

உலகளாவிய கணினி மாதிரிகளின் முன்கணிப்பின்படி, பசிபிக் பெருங்கடலின் ‘நினோ 3.4’ (மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதி) பிராந்தியத்தின் வெப்பநிலை இயல்பை விட 1.5°C வரை அதிகரிக்கும் என 100 வீதம் உறுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வசந்த காலத்தில் நிலவும் காலநிலை முன்கணிப்புச் சவால்களையும் தாண்டி, அனைத்து அறிவியல் மாதிரிகளும் இவ்வளவு ஒத்த கருத்துடன் எச்சரிப்பது உலக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

இந்த எல் நினோ தீவிரமடைதலானது, இதே காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலில் உருவாகும் ‘நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை’ (Positive IOD) மாற்றத்துடன் கைகோர்க்கவுள்ளது.

இந்த இரு பேராபத்துகளின் கூட்டுச் சேர்க்கை காரணமாக, உலகெங்கிலும் உள்ள நிலப்பரப்புகளில் 70% முதல் 80% வரை கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும்.

இதன் விளைவாக, உலக வரைபடம் இரு தீவிர எல்லைகளைச் சந்திக்கவுள்ளது. ஒருபுறம் அமேசான் காடுகளும், அவுஸ்ரேலியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வறட்சியின் பிடியில் கருகவுள்ள நிலையில், மறுபுறம் மத்திய பசிபிக் பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத பெருவெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வரலாற்றை மிஞ்சும் விபரீதம்

கடந்த காலங்களில் 1982-1983 மற்றும் 1997-1998 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ‘சூப்பர் எல் நினோ’ உலகப் பொருளாதாரத்திற்கு மரண அடியைக் கொடுத்ததுடன், பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பையும் ஏற்படுத்தியது.

மிக அண்மையில் 2015-2016 இல் ஏற்பட்ட தாக்கத்தால் உலகளவில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் கொடிய சூறாவளிகளும் தோன்றின. தற்போதைய பொருளாதாரப் பகுப்பாய்வுகளின்படி, இம்முறை உருவாகும் எல் நினோ தாக்கத்தால் உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலி மற்றும் எரிசக்திச் சந்தை ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவு பாரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும், என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சூழலியல் பாதுகாப்பு அமைப்பான ‘ஒசியானா’ (Oceana) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதனால் ‘கடலின் நுரையீரல்’ என்று அழைக்கப்படும் பவளப்பாறைகள் வெளிறி அழியும் (Coral Bleaching) பேராபத்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் மிகத் தீவிரமடையவுள்ளது.

கடல்சார் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்பிடித் தொழிற்துறைக்கு இது மீளமுடியாத பேரிடியாக அமையும்.

அத்துடன், பூமியின் மாபெரும் காபன் உறிஞ்சிகளான காடுகள் கருகி, கட்டுக்கடங்காத காட்டுத்தீயை உருவாக்குவதன் மூலம் வளிமண்டல காபன் உமிழ்வு பல மடங்கு அதிகரிக்கும்.

தென்னாசியாவின் நிலை என்ன?

உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, இந்த இரட்டைத் தாக்கத்தின் மிகப்பெரிய பாதிப்பை இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நஷனல் ஜியோகிராபிக் (National Geographic) இதழின் ஆய்வுக் கட்டுரையின்படி, இந்த எல் நினோ சுழற்சியானது தென்னாசியப் பிராந்தியத்தின் உயிர்நாடியான தென்மேற்குப் பருவமழைப் பொழிவை முற்றாகச் சீர்குலைத்து, மிக மோசமான வறட்சிக்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்ளூர் காலநிலை மற்றும் பொருளாதாரத் தரவுகளின்படி, மழைப்பொழிவுக் குறைவால் நெல், கோதுமை மற்றும் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிரான தேயிலை ஆகியவற்றின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கடுமையான உணவுப் பணவீக்கமும், வாழ்வாதாரப் பாதிப்பும் தலைதூக்கும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் நீர்மின் உற்பத்தியை பெருமளவில் நம்பியிருக்கும் நாடு என்ற ரீதியில், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து கடுமையான மின்சார நெருக்கடியும் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் ஆதாரங்கள் வற்றிப்போதால், மனித – யானை மோதல்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

இது வெறும் வானிலை அறிக்கை அல்ல. நாடுகள் தங்களின் தழுவல் கொள்கைகளையும் நீர் மேலாண்மைத் திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான இறுதி எச்சரிக்கை!

இயற்கையின் இந்த உக்கிரத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைந்து காபன் உமிழ்வைக் குறைப்பதும், உள்நாட்டு அளவில் நீர் மற்றும் உணவு ஆதாரங்களைப் பாதுகாப்பதும் மட்டுமே வரவிருக்கும் பேராபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே கேடயமாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )