
லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு – கனடா, பிரான்ஸ் கண்டனம்
தெற்கு லெபனானை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடா அதற்கு வலுவான கண்டனம் தெரிவித்துள்ளது.
லெபனானின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கனடா எச்சரித்துள்ளது.
இந்த மாதம் தொடங்கியதிலிருந்து லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 1,072 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல், தனது வட எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு லெபனானின் சுமார் 30 கி.மீ பரப்பளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக மனிதாபிமான நெருக்கடி மோசமடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கனடா அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றி, பொதுமக்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, பிரான்ஸும் இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என கோரியுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், லிட்டானி நதி வரை பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படுமென தெரிவித்துள்ளார். அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் உடனடியாக திரும்ப அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு லெபனானில் பாலங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தரைவழி படையெடுப்பிற்கான முன்னோட்டமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என லெபனான் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லெபனானிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலில் ஒரு பெண் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.
