நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்மித்த மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில், நில்வலா கங்கையின் கீழ் ஆற்று பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா, யான் ஓயா, தெதுறு ஓயா மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களுக்கு அண்மித்த பகுதிகளில் 50-75 மில்லி மீற்றர் வரையான குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நில்வலா, கிங் மற்றும் களு கங்கையை அண்மித்த குடா கங்கை, அத்தனகலு ஓயா, மஹா ஓயா மற்றும் தெதுறு ஓயா ஆகியவற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் அடுத்த சில நாட்களிலும் மழை பெய்யக்கூடும் என பொறியியலாளர் எல்.எஸ்.சூரிய பண்டார தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாகவே ஈர வலயத்தை அண்மித்த பல ஆற்றுப் பகுதிகளில் நீர்மட்டம் உயர்வாகக் காணப்படுவதால், தற்போது பெய்யும் சாதாரண மழையுடனேயே அப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 பிரதான நீர்த்தேங்களில் ஒன்பதில் தற்போது வான் பாய்ந்து வருகின்றன.

குறிப்பாக தெதுறு ஓயா, ராஜாங்கனை மற்றும் தப்போவ போன்ற நீர்த்தேக்கங்களில் குறிப்பிடத்தக்க அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள பந்தகிரிய, யோத வாவி மற்றும் திஸ்ஸ வாவி போன்ற குளங்களிலிருந்தும் சாதாரண அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதனால் ஆற்றுப் பகுதிகளின் கீழ் பகுதிகளில் நீர்மட்டம் உயர்வாகக் காணப்படுகிறது.

நாட்டின் நீர்த்தேக்கங்களில் தற்போது 55% கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This