கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் – தமிழக முதல்வரின் வெற்றி குறித்து நிர்மலா சீதாராமன் கேள்வி

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வாக்களித்துதான் ஸ்டாலின் வெற்றி பெற்றாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
கோவையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக கோவை கோட்ட அணி பிரிவுகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஜிஎஸ்டி வரி மாற்றம் செய்யப்பட்டதால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளேன்.
தமிழ்நாடு முழுவதும் ‘எஸ்ஐஆர்’ பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்துவது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த நடவடிக்கையை பாஜக கொண்டு வந்தது போல் திமுக வினர் பேசுகின்றனர்.
கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 13 முறை ‘எஸ்ஐஆர்’ நடைபெற்றுள்ளது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக எதுவும் செய்யாமல், தற்போது மட்டும் ஏன் போராட்டம் நடத்துகிறது.
முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்கிறோம் என புரியாமல் காணொளி வெளியிட்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ‘எஸ்ஐஆர்’ என்றால் என்னவென்று தெரியாமல் ‘ரிவிஷன் ‘என்பதை ‘ரெஸ்ட்ரிக் ஷன்’ என கூறுகிறார்.
தங்களின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க திமுக இது போன்ற நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. எதிர்க்கட்சிகளோ, பாஜகவோ வெற்றி பெற்றால் ‘இவிஎம்’ இயந்திரங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
திமுக வெற்றி பெறும் போது எதுவும் எதிர்த்து பேசுவதில்லை. பிஹாரில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்துள்ளது என பேசுகிறார். தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஒரே பெயர், ஒரே சொந்தக்காரர்கள் பெயர், ஒரே வயது. இருப்பினும் அட்டை எண்கள் மட்டும் வேறு. 933 வாக்காளர்கள் போலி முகவரியில் உள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளை நீக்க வேண்டாமா. கொளத்தூர் தொகுதியில் இத்தகைய முறைகேடுகளால் தான் ஸ்டாலின் வெற்றி பெற்றாரா என நாங்கள் கேட்கலாமா.
தற்போது கண்டறியப்பட்டுள்ள முறைகேடுகளை நீக்க வேண்டாமா. பிஹாரில் 22 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்தவர்கள். இருப்பினும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 7 லட்சம் வாக்காளர்கள் ஒரு இடத்தில் மட்டுமின்றி மேலும் வேறு இடத்திலும் பெயர் பதிவு செய்துள்ளனர். 35 லட்சம் பேர் நிரந்தரமாக பிஹாரை விட்டு வெளியேறி விட்டோம் என கூறியுள்ளனர்.
பிஹாரில் மட்டும் 64 லட்சம் பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க கூடாது. அதற்கு தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரண்டாவது கட்டமாக தேர்தல் ஆணையம் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் ‘எஸ்ஐஆர்’ பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் தேர்தல் ஆணையத்திற்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் சலுகை திட்டங்கள் அறிவிப்பது தொடர்பாக தொழில்துறையினருடன் கலுந்துரையாடி வருகிறோம். விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.” என்றார்.
