இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் நாளை முதல் தொடங்குகிறது – மோடி

ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்.
அவர்கள் விரும்பியதை வாங்கலாம். ஜிஎஸ்டி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும்.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், மகளிர், விவசாயிகள், இளைஞர்கள் அவர்களுக்குப் பிடித்த பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.
இதனால், அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி நோக்கி முன்னேறும். சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை தகர்க்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன்பு வரி விதிப்பு விகிதம் சிக்கலானதாகவே இருந்தது. ஜிஎஸ்டி அமுலாக்கம் இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம். ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதன் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற கோடிக்கணக்கானோரின் கனவு நினைவானது.
இந்த சீர்திருத்தம் மூலம் இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் தொடங்குகிறது. இனி ஜிஎஸ்டியில் 5%, 18% என இரண்டு வரம்பு மட்டுமே இருக்கும்.
இதனால், உணவு, மருந்து, வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் குறையும். கார், ஸ்கூட்டர் வாங்குவது எளிதாக்கப்படும். நடுத்தர மக்கள் தங்கள் இலக்குகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
வருமான வரியிலும் சலுகை, ஜிஎஸ்டியிலும் சலுகை அளித்துள்ளோம். 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளோம்.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கத்தினராக தரம் உயர முடியும். சிறு, நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் பயனடைய முடியும்.
வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் 2.5 லட்சம் கோடி வரை மக்கள் செலவு குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வியாபாரிகள் ஆர்வமாக உள்ளனர்.
பொருட்களை முடிந்தவரை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். அவை உலகத் தரம் மிக்கதாக இருக்க வேண்டும். இந்திய தயாரிப்புகளையே இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் நிலை வர வேண்டும். அப்போதுதான் சுய சார்பு இந்தியா இலக்கை எட்ட முடியும்” என்றார்.