ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு

ஐபிஎல் (Indian Premier League) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
எனினும் அவர் இந்த தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் பலரும் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதனால், அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகுவதாகவும், ராஜஸ்தான் அணியில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சிறப்பான நாளில் ஒரு சிறப்பான தொடக்கம். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு துவக்கத்தைக் கொண்டிருக்கும். ஐபிஎல் வீரராக எனது நேரம் முடிவுக்கு வருகிறது.
ஆனால், பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரம் துவங்கியுள்ளது. அனைத்து அழகான நினைவுகள் மற்றும் எனக்கு வாய்ப்பளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான அஸ்வின், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக 197 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.