இளைஞர் அமைப்புகள் தொடர்பான ரணிலுக்கு குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் பதில்

இளைஞர் அமைப்புகள் தொடர்பான ரணிலுக்கு குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் பதில்

தேசிய இளைஞர் மன்றம் மற்றும் இளைஞர் அமைப்புகளை, கடந்த அரசாங்கங்களே அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இளைஞர் அமைப்புகளை தற்போதைய அரசாங்கம், அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேசிய இளைஞர் மன்றத்திலிருந்து பல மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரத்துக்காக செலவிடப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரசாரத்துடன் இணைந்த இசை நிகழ்ச்சிகளுக்கு 536 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகவும், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் 68 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இலங்கை இளைஞர் அமைப்புகளின் சம்மேளனத்தின் செயலாளராக தரிந்து நவீன் செயற்பட்டு வந்த நிலையில், பாலித ரங்கே பண்டாரவால் அவர் கலகெதரவுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், சம்மேளனத்துக்கான நிதி, அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இளைஞர் சங்கங்களை நிறுவி, மாவட்ட மாநாடுகளை நடத்தியுள்ளதுடன், எதிர்வரும் 12 ஆம் திகதி தேசிய இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தர்ர்.

இந்தநிலையில், எதிர்க்கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை நாடும் ரணில் விக்ரமசிங்க, சில அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு முயற்சிப்பதாகவும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This