தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர கடற்றொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் நேற்றைய விசேட ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து இதனை அறிவித்தனர்.
மீன்பிடி தடை காலம் நிறைவடைந்த 55 நாட்களில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைதானவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் விடுதலை தாமதமாகும் பட்சத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி தங்கச்சிமடத்தில் போராட்டமும், 15 ஆம் திகதி இந்திய சுதந்திரதினத்தன்று உணவு தவிர்ப்பு போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வலியுறுத்தவுள்ளதாக , இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.