உலக அளவில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன்படி, 96வது இடத்தில் இருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்தில் இலங்கை கடவுச்சீட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நான்கு இடங்கள் முன்னேறியிருந்த இலங்கை கடவுச்சீட்டு இம்முறை ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு “தி ஹென்லி 2025” ( “The Henley”) கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதுடன், பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.
ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதுடன், இந்த நாடுகள் இரண்டாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏழு ஐரோப்பிய நாடுகள் மூன்றாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. இதன்படி, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல் மற்றும் ஸ்வீடன் ஆகியவை நாடுகள் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன. நியூசிலாந்து, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்துடன் ஐந்தாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறியனும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இரண்டும் தலா ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் முறையே ஆறாவது மற்றும் 10வது இடங்களில் உள்ளன.
இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி, 85வது இடத்திலிருந்து 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தற்போது 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.