மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட இருவருக்குப் பிணை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் திணைக்களத்தின் இரண்டு உதவி முகாமையாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கவின் உத்தியோகபூர்வ அறையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிவானிடம் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதவானிடம் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்டு, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதோடு, அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார் .
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.