காரில் எரிந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு

மஹவ – தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்திருந்த முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஹோட்டல் தொழிலதிபர் ஒருவர் என தெரியவந்தது.
குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி தலைமுடி வெட்டுவதற்காக வீட்டை விட்டுச் சென்றிருந்ததாகவும், எனினும், அவர் வீடு திரும்பாத நிலையில் அவரின் மனைவி தொரடியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக கூறப்படுகின்றது.
பொலிஸார் விசாரணைக்காக அவரது மனைவியை அழைத்து விசாரித்தபோது, கண்டு பிடிக்கப்பட்ட உடல் அவரது கணவருடையது என அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து, குருநாகல் பொது வைத்தியசாலையில் இன்று (27) பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் குறித்து மஹவ தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.