மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள்

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள்

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையென தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம், முன்னணி சோசலிசக் கட்சியின் விளம்பரச் செயலாளர் துமிந்த நாகமுவ மற்றும் இலங்கை பசுமை அமைப்பு உள்ளிட்ட ஏழு தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது இந்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என உத்தரவிடப்பட்டது.

இந்த மனுக்கள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

முன்மொழியப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை தனியார்மயமாக்க முன்மொழிவதாக இந்த மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் சேவையை நிறுத்துவது தொடர்பான தெளிவான உத்தரவு சட்டமூலத்தில் இல்லை என்றும் மனுக்கள் கூறுகின்றன.

தொடர்புடைய சட்டமூலத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளன.

 

Share This