துசித ஹல்லொலுவ வாகனம் மீதான துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (03) அளுத்கடே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கணேமுல்ல மற்றும் கிரியுல்ல பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 37 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி சுற்றுவட்ட வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அருகில் துசித ஹல்லோலுவ பயணித்த ஜீப் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதன்போது ஹல்லோலுவ மற்றும் அவரது சட்டத்தரணி தினேஷ் தொடங்கொடவும் வாகனத்தில் பயணித்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஜீப் வாகனத்தை வழிமறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.