கைதான 07 பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

கைதான 07 பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 7 பல்கலைக்கழக மாணவர்களை பிணையில் விடுவிக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.

ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 7 பல்கலைக்கழக மாணவர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பபட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

7 பல்கலைக்கழக மாணவர்களும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவனை தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பல்கலைக்கழ மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேக நபர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This