தேசிய விவசாய கொள்கை வகுக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

பல நூற்றாண்டுகளாக எமது நாட்டில் முன்னேற்றம் கண்ட விவசாயமும், சிறந்த நீர்ப்பாசன நாகரீகமும் காணப்பட்டன. இந்த நீர்ப்பாசன நாகரீகமும் விவசாயமும் தற்போது அழிந்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
2025 வரவு செலவு திட்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று வியாழக்கிழமை (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாம் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமானால் விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இது நமது நாட்டிற்கு டொலர்களை ஈட்ட சிறந்த வழியாகும். இது தொடர்பிலான பல யோசனைகளையும் முன்மொழிவுகளையும் இங்கு முன்வைக்கிறேன். இது தொடர்பில் அரசாங்கம் விரைந்து கவனம் செலுத்தும் என நம்புகிறேன்.
நாட்டுக்கென தேசிய விவசாயக் கொள்கையை வகுக்க வேண்டும். காலத்துக்குக் காலம் மாறும் கொள்கைகளுக்குப் பதிலாக தேசியக் கொள்கையை வகுத்து, விவசாய சமூகத்துக்கும் விவசாயத்துக்கும் பெறுமானமளிக்க வேண்டும். விவசாயம் தோல்வி கண்டு விட்டது. அது நஷ்டம் ஏற்படும் துறை என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். நவ லிபரல் சிந்தனைகள் மோலோங்க அனுமதிக்காமல் விவசாயத்தை வலுப்படுத்த தேசிய கொள்கையொன்று எமக்கு தேவையாக காணப்படுகின்றது. இதன் மூலம் விவசாயத்திற்கும், விவசாயிக்கும் உரிய பெறுமானமும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.