
“தைவானால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” – ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி எச்சரிக்கை
சீனா – அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விடயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் அவரை, சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங் வரவேற்றார்.
இதையடுத்து, ஜி ஜின்பிங்கை, டொனால்ட் ட்ரம்ப் இன்று சந்தித்தார்.
இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜி ஜின்பிங் தெரிவித்த கருத்துக்கள் குறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், “டொனால்ட் ட்ரம்ப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தைவான் ஜலசந்தியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பதே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மிகப் பெரிய பொதுவான காரணியாகும் என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
சீன – அமெரிக்க உறவுகளில் தைவான் பிரச்சினை மிக முக்கியமான விடயம் என்று குறிப்பிட்ட ஜி ஜின்பிங், அது சரியாகக் கையாளப்பட்டால் இரு தரப்பு உறவு ஸ்திரத்தன்மையை அனுபவிக்கும் என அவர் கூறினார்.
இல்லாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்றும் ஜி ஜின்பிங் கூறினார். மேலும், தைவான் சுதந்திரமும் தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீன – அமெரிக்க பொருளாதார உறவுகள் பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடியவை இரு தரப்புக்கும் வெற்றியைத் தரக்கூடியவை எனத் தெரிவித்த ஜி ஜின் பிங், இரு நாட்டு வர்த்தக குழுக்களிடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தில், சமநிலையான, சாதகமான முடிவுகள் எட்டப்பட்டிருப்பது இரு நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் நல்ல செய்தி என கூறினார்.
வர்த்தக போர்களில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதை கடந்த கால சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன என தெரிவித்த ஜின்பிங், கருத்து வேறுபாடுகளும் உராய்வுகளும் இருக்கும் இடங்களில் சமமான ஆலோசனை மட்டுமே சரியான தேர்வாக இருக்கும் என்றார்.
நாம் கடினமாக உழைத்து உருவாக்கியுள்ள இந்த நல்ல உறவை; உத்வேகத்தை இரு தரப்பினரும் கூட்டாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
