ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்து மிக்க பகுதிகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவலாவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக பன்றிகளும் ஆபத்தான விலங்குகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அண்மைய மாதங்களில் நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல், தொடர்ந்தும் பரவி வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிக ஆபத்துள்ள பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குள் அல்லது வெளியே கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அந்தந்த பிரிவுக்கு பொறுப்பான கால்நடை மருத்துவரிடமிருந்து அனுமதி பெறாமல், இறைச்சிக்காக, பாதிக்கப்பட்ட விலங்குகளை கொலை செய்தல் மற்றும் அதிக ஆபத்துள்ள விலங்குகளை உள்ளடக்கிய நேரடி சந்தைகளை வைத்திருப்பது தடை செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பன்றிகளின் எண்ணிக்கை மற்றும் பன்றி இறைச்சித் தொழிலுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோய் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.