
அரிசி, குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகள் சுற்றிவளைப்பு
அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை முற்றுகையிட நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை மற்றும் ஹப்புத்தளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர்.
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், திருகோணமலை, காலி, தங்காலை மற்றும் கிராந்துருகோட்டை வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அதேவேளை, ஹப்புத்தளையில் அரிசியை அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் போத்தல்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக ஹப்புத்தளை வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாவும், அனுராதபுரத்தில் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டது.
நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.
