கனடாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்த மதத் தலைவர் பிரவீன் கைது

கனடாவின் பிக்கரிங் மற்றும் மார்க்கமில் உள்ள வீடுகளில் மதப் பிரச்சாரங்களை நடத்திய டொராண்டோ நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது ஏழு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் பல ஆண்டுகளாக இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமைகளின் சூத்திரதாரியாக இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைத் தமிழ்பூர்வீகத்தைச் சேர்ந்த 44 வயதான மதப்பிரசாரகர் மற்றும் மதக்கற்கைளை வழங்கும் நபரான பிரவீன் ரஞ்சன் என்பவர் மீதே யோர்க் பிராந்திய பொலிஸார் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.
சந்தேக நபர், இரண்டு கிரேட்டர் டொராண்டோ பகுதி சமூகங்களில் உள்ள குடியிருப்புகளில் வைத்து “ஆன்மீக ஆய்வு அமர்வுகள்” என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் 2024 ஆண்டுவரை, பிக்கரிங் மற்றும் மார்க்கம் பகுதிகளில் இவர் நடத்திய ஆன்மீகக் கற்கை அமர்வுகளின் போது ஒருவர் ஆறு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேபோல கடந்த டிசம்பரில் இன்னொருவர் இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட இவர் மீதான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்மீது பாலியல் வன்முறை முறையீடுகளை வழங்கிய இரண்டு முறைப்பாட்டாளர்களின் அடையாங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இந்த முறைப்பாட்டாளர்கள் விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை.
இதற்கிடையே சந்தேக நபரான பிரவீன் ரஞ்சனின் நிழற்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் இவரது பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, “விசாாரணையாளர்கள் இன்னும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
மேலும் தகவல் தெரிந்தவர்கள் யோர்க் பிராந்திய பொலிஸ் சிறப்பு பாதிக்கப்பட்டவர்கள் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக” என்று பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாக பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து தகவல்களை வழங்கவேணடும் எனவும் அவ்வாறு வழங்கப்படும் விபரங்களின் இரகசியம் பாதுகாப்பபடும் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கனடாவில் பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிப்பதில் வரம்புகள் எதுவும் இல்லை என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ள, பொலிஸார் சம்பவங்கள் எப்போது நடந்தன என்பதைப் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் இயல்புடைய எந்தவொரு சம்மதமற்ற தொடர்பையும் உள்ளடக்கியது என்று பொலிஸார் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.