மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய இளைஞன் – போடைஸ் பகுதியில் போராட்டம்

டிக்கோயா, போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியொருவர் 24 வயது இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போடைஸ் பிரதேச மக்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளியை கைது செய்யுமாறும், தண்டனை வழங்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, நேற்று (22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தைத் தொடர்ந்து , அவரை எதிர்வரும் மே மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
ஏப்ரல் 20 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் ஒருவன், மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.