ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் உள்ளவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து பயணிப்பதற்குரிய இணக்கப்பாட்டை இரு தரப்புகளும் எட்டிய பின்னர், இரு கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க வைப்பதற்குரிய முயற்சியே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இருவரும் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும் இரு கட்சிகளும் ஒரு கட்சியாக இணைவதற்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எனவே, பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து, பொதுச் சின்னத்தில் – பொதுப் பட்டியலின் கீழ் தேர்தல்களைச் சந்திப்பது பற்றி தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
