த.வெ.க.வினர் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் – பயணிகளுக்கும் இடையூறு

கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கோவைக்கு வருகை தந்த போது அவரை வரவேற்க அந்த கட்சியை சேர்ந்த ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் டிராலிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாகவும் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும்
த.வெ.க.வினர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
முதற்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 07 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 02 நாள் கருத்தரங்கு நேற்று கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் ஆரம்பமானது. கருத்தரங்கில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார்.