
இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையைச் சூழவுள்ள பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தாழ் அமுக்க மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடிப்பதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் (14) மேற்கொள்ளப்பட்ட வானிலை பகுப்பாய்வுகளின்படி, நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பரப்புகளிலும், வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பரப்புகளிலும் பலத்த காற்றுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக பொதுமக்கள், குறிப்பாகக் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
