
“ஹோர்முஸ் நீரிணை இனி ஆயுதமல்ல” ஈரானின் திடீர் முடிவும்.. ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவும்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கிய கேந்திர நிலையமான ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் ஒருபோதும் மூடப்போவதில்லை என ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ‘Truth Social’ சமூக ஊடகப் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஹோர்முஸ் நீரிணையை உலக நாடுகளுக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என ஈரான் வாக்குறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நிர்வாகம் முன்னெடுத்த தீவிர இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் வெற்றியாகவே இந்தத் தீர்மானம் பார்க்கப்படுகிறது.
சர்வதேச வர்த்தகம் மற்றும் மசகு எண்ணெய் போக்குவரத்து ஆகியவற்றில் முதுகெலும்பாக விளங்கும் இந்தப் பாதை தடையின்றி திறந்திருப்பது, உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக அவசியமானதாகும். இந்த இணக்கப்பாட்டின் மூலம் பிராந்திய கடல்சார் போக்குவரத்து மற்றும் கப்பல்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான அச்சுறுத்தல் நீங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை குறைந்து, பொருளாதார வளர்ச்சி சீர்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
