மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் IMF

இலங்கை மின்சார சபை, கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மின்சார கட்டணத்தை திருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த திருத்தத்துடன் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு, புதிய கட்டணத்தால் ஈடுகட்டப்படாது என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் பிரூவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தைப் பார்க்கும்போது, புதிய கட்டணத்தின் கீழ் இலங்கை மின்சார சபை எதிர்கொள்ளும் இழப்புகளைத் தடுக்க முடியாது என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.
இதன் விளைவாக, இலங்கை மின்சார சபையின் கடன்கள் மீண்டும் குவியும் அபாயம் இருப்பதாகவும், அதனால் இலங்கை மின்சார சபை மீண்டும் அரசாங்கத்திற்கு சுமையாக மாறும் என்றும் அவர் கூறினார்.
இலங்கை மின்சார சபை அரசாங்கத்திற்கு எவ்வளவு சுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் அனுபவம் உள்ளதால், வரவிருக்கும் மின்சார கட்டண திருத்தத்தில் செலவு ஈடுகட்டும் மின்சார விலையை மீண்டும் நிர்ணயிப்பது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இழப்புகளை ஏற்படுத்தாத வகையில் விலைகளை நிர்ணயிப்பதற்கான தானியங்கி வழிமுறைகள் ஏற்கனவே உள்ளதாகவும், அவை செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.