டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி – காங்கிரஸ் படுதோல்வி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி – காங்கிரஸ் படுதோல்வி

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியது.மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்றது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜக 68 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 02 இடங்களிலும் போட்டியிட்டன.

வாக்கு எண்ணும் பணிகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று
ஆட்சியை கைப்பற்றியது.

கடந்த 1993 ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1998 வரை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மதன்லால் குரானா,
சாகிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அடுத்தடுத்து முதல்வராக பதவி வகித்தனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மிக்கு தற்போது 22 இடங்கள் மாத்திரமே கிடைத்துள்ளன.

புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அந்த தொகுதியில் பாஜக மூத்த தலைவர் பர்வேஷ் சாகிப் சிங் 30,088 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஜங்கபுரா தொகுதியில் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
டெல்லி முதல்வர் ஆதிஷி, கல்காஜி தொகுதியில் 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This