முச்சக்கரவண்டி விபத்து – வெளிநாட்டவர்கள் இருவர் காயம்

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐரோப்பா ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இருவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை குயில்வத்த பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாடகை அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த இருவரில் ஒருவர் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகவேகத்தில் முச்சக்கவண்டியை செலுத்தியதாலேயே, முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த ஐரோப்பா ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இருவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்தில் முச்சக்கரவண்டி கடும் சேதமடைந்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கமகே தெரிவித்தார்.