
அர்ச்சுனா எம்.பிக்கு பிணை
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.
அதேவேளை அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், கடந்த 25ம் திகதி குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
அதனை அடுத்து, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அர்ச்சுனாவை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து அர்ச்சுனா இராமநாதனை ஐந்து இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில், 20 ஆயிரம் ரூபா பெறுமதியான காசு பிணையிலும் செல்ல அனுமதித்த மன்று, எதிர் தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் போக கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.
அதேவேளை , அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் அவரும் மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.
