
மத்திய கிழக்கு போர் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – புதிய ஆய்வில் தகவல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய கிழக்கு மோதல் காரணமாக 66 வீத மக்கள் எதிர்வரும் மாதங்களின் நிதி நிலைமை குறித்துக் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பத்தில் மூன்று பேர் உணவு மற்றும் எரிசக்தி போன்ற அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக்கொண்டுள்ளதாகவும் கண்டறியக்கப்பட்டுள்ளது.
38 சதவீத மக்கள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தங்களின் நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 25 சதவீதம் பேர் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கத் தங்கள் சேமிப்பைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ஆறில் ஒருவர் தங்களுக்குப் பிரியமானவரிடமோ அல்லது நண்பரிடமோ கடன் வாங்கியதாகவும், 51 சதவீதம் பேர் தாங்கள் கடனில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
12 சதவீத மக்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிவிட்டதாகக் கூறியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
